செந்தமிழ் நாடெனும் போதினிலே

08/06/2013 03:00

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
      தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
      சக்தி பிறக்குது மூச்சினிலே     (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
      வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
      கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு     (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
      கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
      மேனி செழித்த தமிழ்நாடு.                (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
      மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
      யாவும் படைத்த தமிழ்நாடு.     (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
      நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
      மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.     (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
      கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
      பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.     (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
      வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
      யாரம் படைத்த தமிழ்நாடு.     (செந்தமிழ்)

8. சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
      தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
      சால்புறக் கண்டவர் தாய்நாடு.     (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
      வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
      பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.     (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
      தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
      நன்று வளர்த்த தமிழ்நாடு.                (செந்தமிழ்)

 

Back

Search site

© 2013 All rights reserved.